Friday, June 10, 2011

அப்பாஸியர்

கி.பி. 75ஒல் உமையாக்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அபுல் அப்பாஸ் அஸ்ஸ்ப்பாஹ் ஆட்சிபீடமேறியதோடு ஆரம்பமாகிய அப்பாஸிய கிலாபத் கி.பி. 1258ல் ஜங்கீஸ்கானின் மகன் ஹுலாக்குக் கான் பக்தாதைக் கைப்பற்றி கடைசி அப்பஸிய கலீபாவான முஃதஸிமைக் கொன்ற நிகழ்வோடு முடிவடைகின்றது. ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகள் இவ்வாட்சி நீடித்தது.

அப்பாஸியரது எழுச்சியைத் தொடர்ந்து இஸ்லாமிய அரசியல் வாலாற்றில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஸிரியாவில் இருந்த தலை நகர் ஈராக்குக்கு மாற்றப்பட்டது. அதுவரை ஸிரிய நாட்டு அரபு மக்கள் ஆட்ச்யதிகாரத்திலும் சமூக அந்தஸ்திலும் வகித்த செல்வாக்கு மறைந்து போனது.மேற்காசியாவில் காலூன்றியிருந்த எல்லாவகையான முன்னேற்றங்களும் கிழக்காசியாவை நோக்கி நகரலாயின. அப்பாஸியர் ஆட்சியிலமரும் வரை கிலாபத்தில் காணப்பட்டு வந்த ஒருமுகப்பாடு சீர்குலைந்து போனது. தனித்தனி ஆட்சியாளர்களின் கீழ்  பல இராச்சியங்கள் தோன்றலாயின. காலப்போக்கில்  அப்பாஸிய கலீபாக்கள் வலிமை இழந்துபோக தனித்தனியான ஆளுனர்களின் கிழ் பல சிற்றர்சுகள் தோற்றம் பெற்றன. உமையாக் காலம் வரை கிலாபத்திலும் சமூகத்திலும் காணப்பட்டு வந்த அரபுப் பண்பாடுகளும் பழக்கவழக்கங்களும்  செல்வாக்கிழக்க பாரசீக நாகரிக கலாசாரப் பண்பாடுகளே  மக்களால் விரும்பிப் பின்பற்றப்பட்டன. என்றுமில்லாத வகையில் கலை, கலாசார, நாகரிகத் துறைகள் அசாதாரண வளர்ச்சி கண்டன. இ ந் நிலையை பிரான்ஸிய வரலாற்றாசிரியர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
"ஆரம்ப கால அப்பாஸியரின் ஆட்சிக்காலம்கீழைத்தேய முஸ்லிம்களின் பிரகாசம் பொருந்திய காலப்பிரிவாகவே திகழ்ந்தது."

சுமார் ஐந்து நூற்றாண்டுகளைக் கொண்டிருந்த இவர்களது ஆட்சியின் முதல் ஒரு நூற்றாண்டு காலம்தான் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த காலப் பிரிவாகவும் அறிவியல் துறையின் பொற்காலமாகவும் திகழ்ந்ததென்பர்.  பின்னைய காலப்பகுதி அப்பாஸிய ஆட்சியின் வீழ்ச்சிப் பருவமாகும்.  இக்காலப் பிரிவில் கலீபாக்கள் ஆட்சியாளர்களாகத் திகழ்ந்தபோதும் அவர்கள் வெறுமனே பொம்மை ஆட்சியாளர்களாக இருக்க சிற்றரசர்களே கிலாபத்தை வழி நடாத்திச் சென்றனர்.

அப்பாஸிய ஆட்சியாளர்கள்

1. அபுல் அப்பாஸ் அஸ்ஸப்பாஹ் (750 - 754)
2. அல் மன்ஸூர் (754 - 775)
3. அல் மஹ்தி (775 - 785)
4. அல் ஹாதி (785 - 786)
5. ஹாரூன் ரஷீத் (786 - 809)
6. அல் அமீன் (809 813)
7. அல் மாமூன்  (813 - 833)
8. அல் முஃதஸிம் (833 - 842)
9. அல் வாஸிக் (842 - 847)
10. அல் முதவக்கில்847 - 861)

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்வரும் அப்பாஸிய கலீபாக்களின் அரசியற் பங்களிப்புகள்

கலீபா மன்ஸூர் (754 - 775)

அபுல் அப்பாஸைத் தொடர்ந்து அப்பாஸிய கிலாபத்தின் அடுத்த கலீபாவாக அபூ ஜஃபர் அப்துல்லாஹ்  எனும் இயற் பெயர் கொண்ட  இவர் மன்ஸூர் என்ற பதவிப் பெயரோடு  ஆட்சியில் அமர்ந்தார். அபுல் அப்பாஸ் தனது இறுதிக்  காலத்தில் தனது சகோதரன் மன்ஸூரை அடுத்த வாரிசாகவும்  அவருக்கு அடுத்த வாரிசாக அபுல் அப்பாஸினதும் மன்ஸூரினதும் மாமன் ஈஸா இப்னு மூஸாவையும் நியமித்திருந்தார்.

கலீபா மன்சூரின் பதவியேற்பு இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். அவருடைய ஆட்சி முறை அரேபியருடைய அரசியல் வரலாற்றில் கீர்த்தி மிகுந்த சகாப்தமொன்றைத் தோற்றுவித்தது. அசாதாரணத் திறமை வாய்ந்த கலீபா அல் மன்சூரின் முன்மாதிரி பிற்கால அப்பாஸிய கலீபாக்களால் சில தலைமுறைகள் வரை பின்பற்றப்பட்டது. கலீபா மன்சூர் தனது திறமையால் அப்பாஸிய ஆட்சியைப் பலப்படுத்தியதனாலேயே அவருக்குப் பின்னர் அப்பாஸியாக்கள் பலர் ஆட்சிபீடமேற முடிந்தது. அஸ்ஸப்பாஹ் அப்பாஸிய கிலாபத்தின் முதல் கலீபாவாக இருந்த போதிலும், மிகக் குறுகிய காலத்தில் அப்பாஸிய ஆட்சியைப் பலப்படுத்த முடியவில்லை. அவரால் இயலாமற் போன இப்பாரிய பணியை கலீபா மன்சூர் பூர்த்தி செய்தமையால், உண்மையில் இவரே அப்பாஸிய கிலாபத்தின் ஸ்தாபகர் என்று கருதப்படுகிறார்.

மன்சூரின் அரசியல் வெற்றிகள்

கலீபா மன்சூர் பதவிக்கு வந்தவுடன் ஆட்சியைப் பலப்படுத்தவே முதலில் முயன்றார். ஆட்சியைப் பங்குபோட முயன்றவர்களையெல்லாம் அடக்கியொடுக்கி, சிதறுண்டு கிடந்த இஸ்லாமியப் பேரரசை ஒண்றினைப்பதில் அக்கறை எடுத்தார். இம்முயற்சியில் வெற்றி பெறுவதற்காக அவர் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்ததோடு, பயங்கரமும் கொடுமைகளும் நிறைந்த அடக்குமுறைகளையும் கையாண்டார்.

முதல் கட்டமாக தனது சிறிய தந்தை அப்துல்லாஹ் இப்னு அலியின் புரட்சியை அடக்கத் திட்டமிட்டார். அஸ்ஸப்பாஹ்வினால் கிலாபத்தின் வாரிசாக நியமிக்கப்பட்டிருந்த இவர் தனக்கு கிலாபத்தில் உரிமை வேண்டுமெனக்கோறி புரட்சியில் ஈடுபட்டார். ஹர்ரான் போன்ற பிரதேசங்களைக் கைப்பற்றி அப்பிரதேசங்களுக்குத் தானே கலீபா எனப் பிரகடனம் செய்து மக்களிடம் பைஅத்தும் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் அப்துல்லாஹ்வின் புரட்சியை அடக்குவதற்காக அபூ முஸ்லிமின் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார். கலீபாவின் படைக்கும் அப்துல்லாஹ்வின் படைக்குமிடையில் இடம்பெற்ற போராட்டத்தில் (நிசிப்பின் போர் - 754) அப்துல்லாஹ் கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார். அப்துல்லாஹ்வை உடனடியாகக் கொன்று விடுவதால் கிலாபத்தில் பாரிய பூசல்கள் தோன்றும் என்று அஞ்சிய மன்சூர் மிகத் தந்திரமாக அவரை ஒழித்துக்கட்டத் தீர்மானித்தார். அவ்வகையில் உப்பினாலான அடித்தளமொன்றின் மீது நிர்மாணிக்கப்பட்ட ஒரு மாளிகையில் அப்துல்லாஹ் குடியமர்த்தப்பட்டார். சிறிது காலத்தின் பின் அப்பகுதியில் பெய்த பெரு மழையினால் மாளிகையின் அடித்தளம் கரைந்து மாளிகை வீழ்ந்ததால் அதனுள்ளே அகப்பட்டுக் கொண்ட அப்துல்லாஹ் அந்த அனர்த்தத்திலேயே மரணமானார். இந்நிகழ்வு கி.பி.764ல் இடம்பெற்றது.

எதிரிகளை அழித்தொழிக்கும் படலத்தின் அடுத்த கட்டமாக அமைந்தது அபூ முஸ்லிம் குராஸானின் கொலையாகும். அப்பாஸிய கிலாபத்தின் தோற்றத்திலும் அதன் வளர்ச்சி, வியாபகத்திலும் அபூ முஸ்லிமுக்கு கனிசமான பங்குண்டு. இவரது ஈர்ப்பு மிக்க பேச்சாற்றலால் கவரப்பட்ட ஏராளமான மக்கள் அப்பாஸியரை ஆட்சிபீடம் ஏற்றுவதில் முனைப்புக் காட்டினர். குராஸான் பிரதேசத்தில் இவர் சக்தி வாய்ந்த ஒருவராக விளங்கினார். ஈரானின் தேசிய வீரராக மதிக்கப்பட்ட அவரை குராஸானியர் கடவுளின் அவதாரம் என்றனர். அப்பாஸிய கிலாபத்தை நிறுவுவதற்குக் காரணாமாயிருந்த இவருக்கு இவரது விரலசைவாலேயே அதனை அழித்து விடக் கூடிய அளவுக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒருவரை விட்டுவைத்தால் அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது ஆட்சியைக் கவிழ்க்கவும் தயங்கமாட்டார் எனப் பயந்த கலீபா மன்சூர் வேறு சில காரணங்களையும் முன்வைத்து ஒரு சந்தர்ப்பத்தில் தனது ஏவலாளர் ஒருவர் மூலம் அபூமுஸ்லிமையும் ஒழித்துக் கட்டினார்.

அபூ முஸ்லிமைக் கலீபாதான் கொலை செய்தார் என்பதை அறிந்த குராஸானிய மக்கள்  கிலாபத்துக்கெதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இக்கிளர்ச்சிகள் உச்சக்கட்டத்தை அடைந்த போது அவற்றை அடக்குவதற்காக மன்ஸூர் தனது மகன் மஹ்தி சகிதம் தளபதி இப்னு குஸாமாவின் தலைமையில்  ஒரு படையை அனுப்பி கிளர்ச்சிகளுக்கு முடிவு கட்டினார்.

குராஸானியரின் கிளர்ச்சியால் உந்தப்பட்ட, காஸ்பியன் கடலுக்கு மேற்குப் பக்கமாக வாழ்ந்து வந்த்த தபரிஸ்தான் பிரதேச மக்களும் அப்பாஸிய கிலாபத்துக்கெதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். இவர்கள் முன்னமே அப்பாஸிய கிலாபத்தை  ஏற்று அங்கீகரித்திருந்த ஒரு பழம்பெரும் மதப்பிரிவினராவர். இஸ்பாஹின் என்பாரின் தலைமையில் அங்கு வாழ்ந்த முஸ்லிம்களையும் அவ்வப்போது கொன்று குவித்துப் புரட்சி செய்து வந்த இவர்களின் கொட்டத்தை அடக்குவதற்காக மன்ஸூர் அனுப்பிய அரச படை இஸ்பாஹினைக் கொன்று கிளர்ச்சிகளை முடிவுக்குக் கொண்டுவந்தது.

குராஸானியரும் தபரிஸ்தானியரும் கிலாபத்துகு எதிராகக் குழப்பங்கள் விளைவித்த அதே காலப்பகுதியிலேயே தைலம் மற்றும் ஜீலான் போன்ற பகுதிகளிலும் புரட்சிகள்வெடித்தன. மன்ஸூரின் படையினருக்கு இவர்களை எதிர்ப்பதில் ஆறம்பத்தில் சிரமங்கள் இருந்தபோதும் அரச படையினரின் இறுதிக்கட்ட நடவடிக்கைகள்வெற்றியைக் கொடுத்தன.

இதே காலப்பிரிவில் பாரசீகத்தைச் சேர்ந்த ரவேந்தியா எனும் பகுதியில் வாழ்ந்து வந்த மக்களும் கலீபவுக்குப் புது வகையிலான தலையிடியொன்றைக் கொடுத்து வந்தனர். "Khalifa is the Incarnation of God" - "ஆட்சியாளர் எனப்படுபவர் இறைவனின் அவதாரமே" enum akiithaawukku மாற்றமான புது வகைச் சிந்தனையொன்றை இவர்கள் தாம் வாழ்ந்த பிராந்தியத்தில் பிரகடனப்படுத்தினர். ஒரு சமயம் இவர்கள் மன்ஸூரின் அரண்மனைக்கு முன்பாகக் கூடி நின்று, கலீபா இறைவனின் தோற்றத்தில் மறு அவதாரம் எடுத்திருப்பதாகவும் அவரே சகல வசதிகளையும் மக்களுக்குச் செய்து தருவதாகவும் கோசமெழுப்பினர். இது கண்டு ஆத்திரமடைந்த கலீபா இவர்களின் அட்டகாசத்தை அடக்குவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த ரவேந்தியர் கல்லிபாவைக் கொன்றுவிடவும் துணிந்தனர். ஈற்றில் தனது இராணுவத்தின் உதவி கொண்டு, ரவேந்தியர்களில் ஏராள்மானோர் கொல்லப்பட்டதன் மூலம்  இக்கிளர்ச்சித்தீ முற்றாகவே அணைக்கப்பட்டது.

மறுபக்கமாக ஷீஆக்களும் கிலாபத்துக்குப் பெரும் தொல்லைகளைக் கொடுத்து வந்தனர். தமக்குக் கிடைக்கவேண்டிய ஆட்சியுரிமையை அப்பாஸியர் அபகரித்துக் கொண்டதாகப் பிரசாரம் செய்த இவர்கள்,   இமாம் ஹஸனின் கொள்ளுப் பேரர்களான முஹம்மத்("நஃப்ஸ்ஸூஸ்ஸகீ"), இப்ராஹீம் ஆகியோரின் தலைமையில் கிலாபத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். ஒரு கட்டத்தில் மன்ஸூரின் தாக்குதலின்போது தப்பியோடிய இவ்விருவரும் மதீனாவிலிருந்தும் கூபாவிலிருந்தும் இருமுனைப் போராட்டங்களை நடாத்தினர். மன்ஸூரின் படையினது கொடூரமான தாக்குதலால் இரு சகோதரர்களும் கொல்லப்பட்டதோடு கிளர்ச்சிக்கும் முடிவு கட்டப்பட்டது. கி.பி. 762ல் இருவரும் கொல்லப்பட்டனர்.இப்புரட்சியின்போது இரு சகோதரர்களதும் பக்கம் நின்ற ஒரே காரணத்துக்காக மதீனாவில் இமாம் மாலிகும் கூபாவில் இமாம் அபூ ஹனீபாவும் சிறைப்பிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர்.

இவ்வாறு உள் நாட்டில் தனக்க்கெதிராகத் தோன்றிய அத்தனை எதிர்ப்புக்களையும் கலீபா மன்ஸூர் முறியடித்து வெற்றி கண்ட போதும் கிலாபத்துக்கு வெளியே பைசாந்தியரின் அடாவடித்தனகளுக்கும் முடிவுகாண வேண்டிய நிர்ப்பந்தம் கலீபாவுக்கு இருந்தது. இவர்கள் ஏற்கெனவே முஸ்லிம்களிடம் தாமிழந்திருந்த பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றி அட்டகாசம் புரிந்தனர். இவர்களின் கொட்டத்தை அடக்க மேற்க்கொண்ட யுத்தத்தின்போது ஈற்றில் பைசாந்தியப் பேரரசன் முஸ்லிம்களோடு 7 வருட கால நீடிப்பில் ஒரு சமாதான உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டான்.


இவ்வாறே ஆர்மீனியா, மோசுல், ஹிராத் முதலாம் பகுதிகளில் இடம்பெற்ற புரசிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. மன்ஸூரினது காலத்திலேயே க்ந்தகாரும் கைப்பற்றபட்டது. இதன்பின் கிலாபத்தின் எல்லைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் கலீபா முனைப்புக் காட்டிய கலீபா தனதாட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பலப்படுத்துவதிலும் அபிவிருத்தியடையயச் செய்யும் காரியங்களிலும் ஈடுபடலானார்.

இதன் ஒருகட்டமாக தனக்கெனப் புதிதாக ஒரு தலை நகரை (பக்தாதில்) நிர்மாணிக்கும் பணியில் கவனம் செலுத்தினார். அப்பாஸியரின் உண்மையான தாபகர் எனக் கொள்ளப்படுகின்ற இவர் ஷீஆக்களில் ஒரு பிரிவினரான அலவியரின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த கூபா நகருக்குப் பதிலாக பக்தாதைத் தலை நகராக்கினார். தானே திட்டமிட்டுப் பொருத்தமான இடத்தில் பொருத்தமான அமைப்பில் பக்தாதை நிர்மாணித்ததோடு பல நாட்டு வணிகர்களும் அறிஞர்களும் ஒன்றுகூடும் மையமாகவும் அந்த நகரை மாற்றி அமைத்தார். காலித் பின் பர்மகீயின் செல்வாக்கினால் அந்த நகர் மேலும் செலுமைபெற்றது.22 வருடங்கள் ஆட்சி செய்த இவர் தனது வாழ்விலும் நடத்தையிலும் முன்மாதிரியான ஒருவராக நடந்துகொண்டார். இவரிடம் காணப்பட்ட பல்பரிமாண ஆளுமைப் பண்புகள் இஸ்லாமிய வரலாற்றில் இவரைத் தனித்துவம் மிக்க சிறப்புக்களைக் கொண்டவராக மாற்றின.



ஹாரூன் ரஷீத்

உலகம் ஈன்றெடுத்த மாபெரும் அரசர்களுள் ஒருவரான இவர், கலீபா மஹ்திக்கும் கைஸூரான் என்பவருக்கும்  மகனாக கி.பி. 763 பெப்ரவரி மாதமன்று "ரை"  நகரில் பிறந்தார். யஹ்யா பர்மகீ ஹாரூனின் இளமைக்கால ஆசானாவார். 786ல் கலீபாவான இவரின் ஆட்கிக்காலத்தில் அரசியல் வரலாற்றில் புகழ் மிக்க ஒரு சகாப்தம் தோற்றம் பெற்றதெனலாம். பல திறமைகளை ஒருங்கே பெற்றிருந்த ஹாரூன் திறமை மிக்கவர்களையே தனது நிருவாகிகளாக அமர்த்திக்கொண்டதால் அவரது ஆட்சி மென்மேலும் புகழ்பூத்து விளங்கியது. அரச நிர்வாக விடயங்களில் தனது தாயார் கைஸூரானையே தனது ஆலோசகராக நியமித்துக் கொண்டார். ஹாரூனுடைய ஆட்சியின் சிறப்புக்கு இக்காலத்தில் புகழ்பூத்து விளங்கிய பர்மகீ குடும்பத்தாரின் பங்களிப்பு மகத்தானதாகும்.

சுமார் 23 ஆண்டு காலம் இஸ்லாமியப் பேரரசை ஆட்சி செய்த கலீபா ஹாரூன் அல் ரஷீத் தமது பண்பு நலங்களாலும் சேவைகளாலும் உலக வரலாறு கண்டௌன்னத ஆட்சியாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். மத பக்தி மிகுந்த அவர் இஸ்லாமிய நெறிமுறைகளை தவறாது பின்பற்றி அதன்படி ஒழுகினார். தினந்தோறும் கட்டாயத் தொழுகையைத் தவிர 100 ரகாஅத் 'நஃபில்' தொழுகையை நிறைவேற்றினார். தினந்தோறும் 1000 திர்ஹம்களை தமது சொந்தப் பணத்திலிருந்தும் அரசாங்க நிதியிலிருந்தும் ஏழைகளுக்கு தர்மம் செய்தார். தமது ஆட்சிக் காலத்தின் போது அடிக்கடி மக்காவுக்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றினார். இவ்வாறு இவர் 9 தடவை ஹஜ் சென்றார். ஒவ்வொரு முறையும் பெருந்த்தொகையான பணத்தை மக்காவில் தர்மம் செய்தார்.

மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்த அவர் மக்கள் மகிழ்ச்சியையே தமது மகிழ்ச்சியாகக் கருதினார். மக்கள் குறைகளை உடனுக்குடன் அறிந்து ஆவன செய்வதற்காக இரவு நேரங்களில், பக்தாத் தெருக்களிலெல்லாம் மாறு வேடத்தில் சுற்றித் திரிந்தார். கிழக்கு முதல் மேற்கு வரை மக்கள் குறைகளைத் தெரிந்து கொள்வதற்காக அடிக்கடி பிரயாணம் செய்தார். கலீபா ஹாரூன் இராச்சியம் முழுவதிலும் கடுமையான பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் யாத்திரிகர்கள், பிரயாணிகள், வர்த்தகர்கள் அனைவரும் பயமின்றிப் பயணிக்க முடிந்தது. மக்களின் நலன் கருதிப் பாடசாலைகள், விடுதிகள், மருத்துவமனைகள், பள்ளி வாசல்கள் முதலியவற்றையும் நிறுவினார்.

கலீபா ஹாரூன் இயல்பாகவே வீரமும் துணிவும் மிக்கவராக விளங்கினார். புனிதப் போர் புரிவதில் அளவுகடந்த ஆர்வம் காட்டினார். அவசர வேளைகளில் தாமே படையெடுத்துச் சென்று போர் புரிந்தார். வெற்றி வாய்ந்த அரசாங்க நிர்வாகியாக விளங்கிய இவர் மிகத் திறமையான முறையில் இராச்சிய நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார். அவர் அறிமுகப்படுத்திய புதிய தபால் முறை அக்காலத்தில் மிகச் சிறப்புற்றதாக விளங்கியது. பேரரசின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நடைபெறும் சம்பவங்களையெல்லாம் உடனுக்குடன் அறியக் கூடிய விதத்தில் அத்தபால் முறை அமைந்திருந்தது. விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் முதலான துறைகளையும் அவர் ஊக்குவித்தார். இதனால் இராச்சியம் பூராகவும் செழிப்பு வாய்ந்த செல்வ நிலைமை காணப்பட்டது. 'ஆயிரத்தோர் இரவுகள்' கதை அவர் கால வர்த்தக நடவடிக்கைகளை நங்கு விளக்குகின்றன. ஜெர்மனி, போலந்து, சுவீடன், ரஷ்யா முதலான நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் அவருடைய காலத்தில் அறேபியர் உலகின் சகல நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கலீபா ஹாருனின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியப் பேரரசு செல்வச் செழிப்பிலும் புகழ்ச் சிறப்பிலும் உச்ச நிலையை அடைந்திருந்தது. ஹாரூனின் அரசவை அக்காலத்தில் சிறப்பு மிகுந்த ஓர் அவையாக விளங்கியது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள் ஹாரூனின் அரசவைக்கு வந்தனர். அவர்கள் இன்முகத்தோடு வரவேற்கப்பட்டனர்.

ஹாரூனுக்கு எல்லா வகையிலும் பர்மகீ குடும்பத்தார் பக்க பலமாக இருந்து வந்தனர். காலித் பர்மகீயின் மகனான யஹ்யா ஹாரூனின் ஆசானாக இருந்தது மாத்திரமன்றி அவர் பதவியில் அமர்வதற்கும் உதவி செய்தவராவார். இதன் காரணமாக யஹ்யாவின் புத்திரர்களான பழ்ல், ஜஃபர், மூஸா முதலானோர் ஆட்சியின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். பர்மகீகள் ஆடம்பர, உல்லாச அரண்மனைகளை கிலாபத்தில் நிறுவினர். பன்னாட்டு அறிஞ்சர்களையும் சான்றோர்களையும் நூல்களையும் பக்தாதுக்கு வரவழைத்தனர். இதனால் அறிவுத் துறை பெருவாரியாக வளர்ச்சி கண்டது.இக்கலத்தில் புகழின் உச்சத்தை அடைந்திருந்த அவர்கள் செய்வச் செழிப்போடு வழ்ந்தனர். இவர்கள் தமது செல்வங்களையெல்லாம் நல்லறங்கள் செய்வதில் செலவிட்டனர். தமது சொந்தச் செலவிலேயே விடுதிகள், கிணறுகள், கால்வாய்கள், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள். மருத்துவ மனைகள், நெடுஞ்சாலைகள், மஸ்ஜித்கள் முதலானவற்றை கிலாபத் முழுவதிலும் நிறுவினர்.

பர்மகீகள் இவ்வாறு பல்வேறு மட்டங்களிலும் பெற்று வந்த செல்வாக்கைக் கண்டு மனம் புழுங்கிய ஹாரூனின் முதலமைச்சர் பஸ்ல் இப்னு ரபீஆ, பர்மகீகள் ஷீஆக்களாதலால் அப்பாஸிய ஆட்சி காலப்போக்கில் அலவிய்யூன்களிடம் சென்று விடலாம் என்று கலீபாவிடம் தப்பெண்ணமொன்றை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டார். அரசவையில் பர்மகீகளுக்கு வழங்கப்பட்டிருந்த வரம்பில்லாத அதிகாரங்களும்கூட முதலமைச்சரிடமும் ஏனைய பிரமுகர்களிடமும் இவர்களைப் பற்றிய தப்பெண்ணம் தோன்றுவதற்கான பிறிதொரு காரணமாக அமைந்ததெனலாம். எனவே பர்மகீயரின் செல்வாக்கை அழித்தொழிக்கும்  முயற்சியில் கலீபா ஹாரூன் தீவிர முனைப்புக் காட்டினார். உண்மையில் இந்த முனைப்புத்தான் ஹாரூனின் வரலாற்றில் ஓர் இருண்ட அத்தியாயம் தோன்றவும் வழி சமைத்தது.

ஹாரூனின் காலத்தில் தாருல் ஹிக்மா என்ற பெயரில் ஒரு கல்வித் தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது. இது சமகாலத்தில் ஒரு நூலகமாகவும் மொழிபெயர்ப்புக் கூடமகாவும் ஓர் அறிவு மையமாகவும் விளங்கியது. இக்காலத்தில் இலக்கண மேதை அஸ்மஈ, மருத்துவ அறிஞர் ஜிப்ரீல் இசை ஞானி இப்றாஹீம் மௌசூலி சட்ட அரீக்ணாற் ஆபூ யூசுஃப் என சிறப்பான பல அறிஞர்கள் வாழ்ந்து வந்தனர். இக்காலத்தில் ஈரானிய வானியல் விஞ்ஞானம் மொழிபெயர்ப்புப் பணியினூடாகா அரேபியாவுக்கு அறிமுகமாகியது. ஹாரூனின் காலத்தில் பெரும்பாலும் விஞ்ஞானத் துறைகளை விட கலை, இலக்கியத் துறைகளே சிறப்புற்று ஓங்கின. அரிஸ்டோட்டில் போன்ற கிரேக்க அறிவியல் மேதைகளின் நூல்களையும் சித்தாந்த மற்றும் பஞ்சதந்திரக் கலைகளையும் (இந்தியா) ஹீப்ரு, துருக்கி, எதியோப்பியம், மலாயி போன்ற மொழிகளிலுள்ள நூல்களையும் அரபு மொழிக்கு மொழியாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் கலீபா ஹாரூன் செய்தார். இக்காலத்தின் சிறப்புமிகு மொழிபெயர்ப்பாளர்களாக இப்னு பத்ரீக், யஹ்யா இப்னு முஆவியா போன்றோர் விளங்கினர்.

ஹாரூனின் காலத்தில் ஏற்பட்ட உள் நாட்டுக் குழப்பங்களை அடக்குவதற்காக பர்மகீயினர் புதியதோர் உத்தியைக் கையாண்டனர். குழப்பக்காரர்களுக்கு எதிராகப் போராடுவதற்குப் பகரமாக அவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தி சுதந்திரமாக அவர்களை ஆட்சி செய்ய அனுமதித்து திறைப் பணம் பெற்றுக் கொள்வதே   அந்த உத்தியாகும். பர்மகீகள் மேற்கொண்ட இத்தகு நடவடிக்கை பிற்காலத்தில் சிற்றரசுகள் தோன்றவும் வழிவகுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.


கலீபா மாமூன்

கலீபா அமீன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது சகோதரர் மாமூன் ஹிஜ்ரி 198ல் அப்பாஸிய கிலாபத்தின் அடுத்த கலீபாவாகப் பதவி ஏற்றார். பாரஷீக  அடிமைப் பெண் ஒருவருக்கு மகனாக ஹிஜ்ரி 170ல் பிறந்த இவரது  இயற் பெயர் அப்துல்லாஹ் என்பதாகும். இவரது தந்தை கலீபா ஹாரூன் இவருக்கு வழங்கிய பட்டமே மாமூன் (நம்பிக்கையாளர்). இளம் பருவத்தில் மாமூனுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பு யஸீதீ என்பவரிடமும் கண்காணித்து வளைக்கும் பொறுப்பு ஜஃபர் பர்மகீயிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஐந்து வயதிலேயே தனது கல்வியை ஆரம்பித்த இவர் அக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய புகழ்பூத்த அறிஞர்களிடம் கல்வி பயின்றார். அற்ஞர்களோடு தொடர்புகளை வைத்துக் கொள்வதில் அலாதி விருப்பம் காட்டினார். ஆரம்பம் முதலே மெய்யியல் துறையில் ஆர்வம் காட்டியதால் மெய்யியல் தத்துவ விசாரணைகளில் ஈடுபட்ட முதல் முஸ்லிம் ஆட்சியாளராகவும் இவர் கருதப்படுகிறார்.

அமீனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மாமூனுக்கு ஆட்சித் துறையில் ஈடுபடுவதைவிட அறிவாராய்ச்சித் துறைகளில் ஈடுஓடுவது மிக விருப்பமாக இருந்தது. கலீபா அமீன் கொல்லப்பட்டபோதுகூட  இவர் மர்வ் நகரிலேயே இருந்தார். கலீபாவானபோதும் அவர் பக்தாதுக்குச் செல்லவில்லை. மாமூன் தலை நகர் வந்து சேரும் வரை முதலமைச்சர் பழ்ல் பின் ஸஹ்ல் என்பவரே கலீபாவுக்குப் பதிலாக  நாட்டு நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். ஒருபக்கம் அதிகார மோகமும் மறுபக்கம் நிர்வாகத் திறனுமற்றுக் காணப்பட்ட பழ்லின் பக்கச் சார்பான நடவடிக்கைகளால் வெகு விரைவிலேயே மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டார். இதனால், ஸிரியாவில் வாழ்ந்த உமையாக்களும் ஹிஜாஸில் வாழ்ந்த ஷீஆக்களில் ஒரு பிரிவினரான அலவிய்யூன்களும் கிலாபத்துக்கெதிராகக் கிள்ர்ச்சிகள் செய்தனர். பக்தாதெங்கும் முதலமைச்சர் பழ்லுக்கு எதிரான கிளர்ச்சிகள் வெடித்த போதும் இவை பற்றி கலிபா மாமூன் அறிந்திருக்கவில்லை.

இந்நிலையில் மாமூன் தனது மகளை ஷீஆ இமாம்களுள் ஒருவரான அலி ரிழா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து அடுத்த வாரிசாகவும் அவரை நியமித்தார். இது அப்பாஸியர் மத்தியில் அலவிய்யூன்களுக்கு கலீபா மாமூன் கிலாபத்தை தாரை வார்க்கப் போகிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது மாத்திர்மன்றி அவர்களை ஆத்திரம் கொள்ளவும் செய்தது. இதனால் கிலாபத்தெங்கும் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து போயிற்று. பக்தாத் நகர் பெரும் நெருக்கடிக்குள்ளாகியது. இவ்வேளை பக்தாதின் நிலைமையை தனது மருமகன் மூலம் அறிந்து கொண்ட மாமூன் உடனே பக்தாதுக்குச் செல்ல ஆயத்தமானார். மாமூனின் வருகையை அறிந்த பக்தாத் நகர மக்கள் தமது கோபத்தையும் அதிருப்தியையும் மறந்து அவரை வரவேற்றனர். கலீபாவின் வருகையோடு அனைத்துக் குழப்பங்களும் அடங்கிப் போயின. அமைதியும் ஒழுங்கும் மீண்டும் நிலை நாட்டப்பட்டன.  முதலமைச்சர் பழ்லின் திருகுதாளங்களை அறிந்த மாமூன் அவரை நீக்கிவிட்டு ஹஸன் என்பவரைப் புதிய அமைச்சராக நியமித்துக் கொண்டார்.  தான் பக்தாதுக்கு வருமுன் கிலாபத்தில் காணப்பட்ட அனைத்துக் குழப்பங்களையும் அடக்கியொடுக்கிய கலீபா அதுவரை குழப்பங்களாலும் புரட்சிகளாலும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த பக்தாத் நகரை மீள் புனருத்தாரணம் செய்தார்.

மாமூனின் காலத்திலேயே கிலாபதுர்- ராஷிதா ஆட்சிக்குப் பின்னர் ஜனநாயகக் குடியரசு  முறை மீண்டும் கிலாபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதெனலாம். அரசியல் நிர்வாக விவகாரங்களில் கலீபாவிக்கு ஆலோசனை கூறுவதற்கென அரச சபையொன்றும் இவரால் உருவாக்கப்பட்டது. குலபாஉர்- ராசிதூங்கள் காலத்து மஜ்லிஸுஷ்-ஷூராவை நிகர்த்ததாகக் காணப்பட்ட இந்த சபையில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி திம்மிகளான யூதர்களும் கிறிஸ்தவர்களும்கூட அங்கம் வகித்தனர். சமய வேறுபாடின்றி சகலரையும் சமமாக மதித்த கலீபா திம்மிகளுக்குப் போதிய சலுகைகளையும் உரிமைகளையும் வழங்கினார். இதனால் 11 000 க்கும் அதிகமான கிறிஸ்தவ தேவாலயங்களும் பல நூற்றுக்கணக்காண மஜூஸிய, யூத கோயில்களும் காணப்பட்டதாக வரலாற்று அறிஞ்சர்கள் குறிப்பிடுவர்.தகுதியும் திறமையும் உடையோருக்கே இவரது ஆட்சியில் உத்தியோகங்கள் வழங்கப்பட்டன. மாமூன் முஃதஸிலாக் கொள்கையை  ஆதரித்ததோடு குறித்த அந்தக் கொள்கையை கிலாபத் முழுவதிலும் பரப்பும் நோக்கில் அதனை அரச கொள்கையாகவும் பிரகடனம் செய்தார். அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முஃதஸிலாக்களின் கொள்கையை அவரும் ஏற்று பிரஜைகளும் ஏற்றுக்கொள்ள  வேண்டுமென ஆணை பிறப்பித்தார். இக்காலப் பிரிவில் வாழ்ந்த சட்ட அறிஞர் அல்-இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களைத் தவிர பெரும்பாலும் ஏனைய அறிஞர்களெல்லாம் மாமூனுக்கு அஞ்சி இக்கொள்கையை ஏற்றனர்.

கலிபா மாமூனின் ஆட்சிக் காலம் கல்வி மற்றும் கலாசாராத் துறைகளின் பொற்காலமாக விளங்கியது. அறிவுத் துறைகளில் ஆர்வமும் ஆசையும் கொண்டிருந்த மாமூன் தமது ஆட்சிக் காலத்தை கல்வி, கலாசார விருத்திக்காகவும் நாகரிக முன்னேற்றத்திற்காகவும் செலவிட்டார். கணிதம், பௌதிகவியல், உயிரியல், பொறியியல், புவியியல், வானியல், மெய்யியல், மருத்துவம், இலக்கியம், வரலாறு, இசை முதலிய துறைகள் செழிப்புற்று வளர்ந்தன. கல்வி வளர்ச்சிக்காக இராச்சியம் பூராகவும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நிறுவப்பட்டன. கலீபாவின் அரசவையிலேயே பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த அறிஞர்கள் பலர் வீற்றிருந்தனர். அவரகள் அனைவரியும் கலீபா வெகுவாக ஆதரித்துக் கௌரவித்தார்.

கலீபா மன்சூரால் ஆரம்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்புப் பணி, மாமூனின் காலத்தில் உச்ச நிலையை அடைந்தது. ஏற்கனவே இயங்கிவந்த 'தாருல் ஹிக்மா' எனும் கல்விக் கூடத்தை 'பைதுல் ஹிக்மா' எனும் பெயரில் விரிவுபடுத்தினார். இந்நிலையம் மொழிபெயர்ப்புப் பணியகமாக மாத்திரமன்றி, ஆராய்ச்சிக் கழகமாகவும் நூல்நிலையமாகவும் பணி புரிந்தது. உலகின் பல பாகங்களிலிருந்தும் அறிவு நூல்கள் இங்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் புலமை வாய்ந்த நிபுணர்கள் அறபு மொழியில் பெயர்த்து மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். கிரேக்க, ஸிரிய மொழி நூல்கள் குஸ்தா இப்னு லூக்கா என்பவரின் மேற்பார்வையிலும், பாரசீக மொழி நூல்கள் யஹ்யா இப்னு ஹாரூன் என்பவரின் மேற்பார்வையிலும், சமஸ்கிருத நூல்கள் தூபான் என்ற பிராமணரின் மேற்பார்வையிலும் மொழிபெயர்க்கப்பட்டன. ஈற்றில் இந்நிலையம் அக்காலத்தில் அறிவின் சிகரமாகக் காட்சியளித்தது. மாமூன் கால மொழிபெயர்ப்பாளர்களுள் ஹுனைன் இப்னு இஷாக், ஹுஃபைஸ் இப்னு அல் ஹஸன், ஈஸா இப்னு யஹ்யா, மூஸா இப்னு காலித் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் மகலன், ஹிப்போக்கிரடிஸ், அரிஸ்டோட்டில், பிளேட்டோ, தொலமி, பைதகர்ஸ் முதலிய கிரேக்க மேதைகளின் அறிவியல் நூல்களை அறபு மொழியில் பெயர்த்தனர்.

கலீபா மாமூன் மொழிபெயர்ப்புப் பகுதியை விஸ்தரித்தது மாத்திரமன்றி அங்கு நூல்நிலையமொன்றையும் நிறுவினார். 22 லட்சம் நூல் பிரதிகளைக் கொண்டிருந்த இந்த நூல்நிலையம் ஹுனைன் இப்னு இஸ்ஹாக் என்பவரது மேற்பார்வையின் கீழ் காணப்பட்டது. பைதுல் ஹிக்மாவில் இயங்கிய ஆராய்ச்சி நிலையத்திற்கு அக்காலத்தில் மெய்யியலில் புகழ் பெற்று விளங்கிய அல் கிந்தீ  பொறுப்பாளராகக் கடமையாற்றினார்.

இக்காலப் ப்பிரிவில் அறிவியலின் பல்வேறு துறைகளும் முன்னேற்றம் கண்டன. அபுல் அதாஹிய்யா, அபூ தமாம் போன்றோர் அரபு இலக்கியத் துறை வளர்ச்சியிலும், அப்பாஸ் மர்வாஸீ முதலானோர் பாரசீக இலக்கியத் துறை வளர்ச்சியிலும் இக்காலப்பிரிவில் பெரும் பங்காற்றினர். மெய்யியல் துறை வளர்ச்சிக்கு மாமூன் அனுசரணை வழங்கியது மட்டுமன்றி அத்துறையோடு சேர்த்து இலக்கியம், விஞ்ஞானம் போன்ற துறைகள் தொடர்பாகக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவென வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. இக்கலந்துறையாடல்களுக்கு கலீபாவே தலைமை தாங்கினார்.  மருத்துவத் துறையின் வளர்ச்சியில் ஹுனைன் இப்னு இஷாக், யுஹன்னா, ஜிப்ரீல் பக்திஷூ முதலானவர்களின் பங்களிப்பு மகத்தானதாக அமைந்தது. வானியல் ஆராய்ச்சிகள் மிக விரிவாக இடம்பெற்றன. ஷம்ஸியா எனுமிடத்தில் மாமூன் வானோக்கு நிலையம் ஒன்றை நிறுவினார்.பூமியின் சுற்றளவைக் கண்டறியும் முயற்சிக்கும் வழி செய்தார். இக்காலப் பிரிவிலேயே வானியல் துறையில் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கும் தொலை நோக்கிக் கருவி அபுல் ஹஸன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கணிதவியலிலும் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அல்குவாரிஸ்மீ போன்ற கணித மேதைகள் இக்காலப்பிரிவிலேயே வாழ்ந்தனர். இவர் எழுதிய கணித நூலொன்று 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் பாட நூலாகப் பயன்படுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரால் எழுதப்பட்ட பிறிதொரு நூலான "கிதாபு ஸூரதுல் அர்ழ் எனும் பிரபலமான நூலும் இக்காலப் பிரிவிலேயே வெள்வந்தது. அல்-கல்பீ(கிதாபுஷ்ஷாம்), வாகிதீ(கிதாபுல் மகாழி), இப்னு ஸஃத்(தபகாதுல் கபீர்), இமாம் புகாரீ முதலாம் அறிஞ்சர்கள் வரலாற்றுத் துறை சிறந்தோங்க வழி செய்தனர்.

உண்மையில் கலீபா மாமூனின் இவ்வாறான அறிவுப் பணிகள்தாம் ஐரோப்பா அறிவொளி பெறக் காரணங்களாக அமைந்தன என்பதற்கு அப்பால் அழிந்து போய்விடக்கூடிய நிலையிலிருந்த புராதன காலத்து அறிவியல் கருவூலங்கள் பாதுகாக்கப்படவும் வழி செய்தன எனலாம். ஐரோப்பியர் இழந்திருந்த கல்விச் செல்வங்களை அவர்கள் மீண்டும்பெற்றுக் கொள்ள மாமூனின் தொடரான அறிவுப் பணிகளே துணை செய்தன. இந்தவகையில் மாமூனை முஸ்லிம்களின் கலாசாரப் புரட்சி ஒன்றுக்கு வித்திட்டவர் எனத் துணிந்து கூறலாம்.

அப்பாஸிய ஆட்சியின் பிற்பட்ட காலம்

அப்பாஸியர் பதவியேற்று ஒரு நூற்றாண்டு காலத்துக்குள்ளேயே அவர்களின் செல்வாக்கு மங்க ஆரம்பித்தது. அதற்கு அரசியல், சமூகக் காரணிகள் பல காரணமாயின. கலீபா முஃதஸிமுக்குப் பின்னர் பதவியேற்ற கலீபாக்கள், கிலாபத்தின் செழுமைக்கேற்ப அரசாட்சியைக் கொண்டு நடத்தும் தகைமையை இழந்திருந்தார்கள். அடிக்கடி அலவியர் போன்ற எதிர்க் குழுக்களால் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்ட போது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்தனரே தவிர,  அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. கலீபாக்கள் தமது சுகபோகத்துக்காக ஆட்சியை வைத்துக் கொண்டார்களே தவிர, மக்கள் நலனில்  கவனம் செலுத்துவதை குறைத்துக் கொண்டனர். நிர்வாக செயற்பாடுகளில் ஈடுபட்ட அமைச்சர்கள், தளபதிகள், கவர்னர்கள் கலீபாவைப் பெயரளவில் மாத்திரம் வைத்துக் கொண்டு தாங்கள் சுயமாக ஆட்சி நடாத்த ஆரம்பித்தனர்.

இக்காலப் பிரிவின் அப்பாஸிய ஆட்சியை (945 - 1258) பின்வருமாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
1. 945 - 1055 வரை ஆட்சி செய்த புவைஹித் ஆட்சியாளர்கள் (ஷீஆக்கள்)
2. 1055 - 1152 வரை ஆட்சி செய்த சல்ஜூக் ஆட்சியாளர்கள் (துருக்கிய இனத்தினர்)
3. 1152 - 1258 (அப்பாஸியரின் கடைசி காலப் பகுதி) - இக்காலப் பிரிவில் 7 கலீபாக்கள் ஆட்சி செய்தனர். 

பல்வேறு காரணங்களால் கிலாபத்தில் தோன்றி வளர்ந்த சிற்றரசுகள் தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டதை எல்லைப் புற அரசுகள் கிலாபத்தை எதிர்ப்பதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டன. அவை சிற்றரசுகளுக்கு உதவும் பாங்கில் கிலாபத்தினுள் நுழைந்தன. இவ்வேளை, ஓங்கி வளர்ந்து வந்த மங்கோலியப் பேரரசு முஸ்லிம்களது எல்லைப் பகுதியில் தலையிட ஆரம்பித்தது. 1257ல் பக்தாதில் நுழைந்த மங்கோலியத் தாத்தாரியர் அப்பாஸியரை அடித்து விரட்டி பக்தாதிலிருந்தே அவர்களை ஒழித்துக் கட்டினார்கள்.

அப்பாஸிய கிலாபத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

1. பின் வந்த கலீபாக்களின் தகுதியீனம்
2. கலீபாக்களிடம் ஏற்பட்ட பதவிப் போட்டி
3. பொருத்தமற்ற பொழுதுபோக்குகள்
4. துருக்கியரின் செல்வாக்கு
5. சிற்றரசுகளின் தோற்றமும் போட்டியும்
6. நிர்வாக ஒழுங்கீனமும் இராணுவப் புறக்கணிப்பும்
7. சிலுவை யுத்தங்கள்
8. பொருளாதாரச் சீர்கேடு
9. மங்கோலியப் படையெடுப்பு

No comments:

Post a Comment