Friday, May 6, 2011

முகலாயர் ஆட்சி (கி.பி.1526-1858, ஹி.932-1274)

இந்திய வரலாற்றில் முஸ்லிம்களது ஆட்சியின் பொற்காலமாக முகலாயரது ஆட்சிக்காலம் கருதப்படுகிறது. சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆட்சி செய்த இவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய உபகண்டத்தில் பெரும் பகுதி முழுவதையும் தமதாட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். இவர்கள் இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமய, சமூக மாற்றங்களுக்கு தமது பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்
.

இந்தியாவில் இஸ்லாமிய ஷரீஅத் அமைப்பிலான  ஆட்சியை முகலாயர் தமதாட்சிக் காலத்தில் ஏற்படுத்தினர். இவர்களது ஆட்சியின் கீழ் இவர்கள் பின்பற்றிய சமயப் பொறை காரணமாக மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தனர். நீண்ட கால ஆட்சியொன்றை முகலாயர் தொடர்வதற்கு அவர்கள் பின்பற்றிய சமய சகிப்புத் தன்மையே காரணமாக அமைந்தன எனலாம். இவர்களது இராணுவத்தில் சேர்ந்திருந்த முஸ்லிமல்லாதோருக்கு ஜிஸ்யாவிலிருந்தும் விலக்களிக்கப்பட்டிருந்தது.

பாபர் (கி.பி.1526 - 1530)

துருக்கியில் கலீபா சுலைமானும் பிரான்ஸை 1ம் ஃபிரான்சிஸ்ஸும் ஜெர்மனியை 5ம் சார்ல்ஸ்ஸும் இங்கிலாந்தை 8ம் ஹென்றியும் ஆரசோச்சிய காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்தவரே பாபராவார். இவர்களோடு பாபரை ஒப்பிடும்போது பாபர் மிகச் சிறந்த வீரராகவும் கலைஞராகவும் அறிஞராகவும் விளங்குகிறார். மனிதாபிமானமிக்க இவர் தனது நண்பர்களைப் போற்றினார்; உறவினர்களை நல்வழிப்படுத்தினார். இந்தியாவின் மீது படையெடுத்து கொள்ளையடித்துச் சென்ற முன்னோர்களைப் போலல்லாமல் நிரந்தர ஆட்சி அமைத்து மக்களுக்கு நிலையான வாழ்வு தந்தார். அவரது சகோதரர் நஸீர் மிர்ஸா அவருக்குப் பல தொல்லைகள் தந்த போதிலும் தன்னம்பிக்கையுடையவர் பாபர். எது நடப்பினும் அது ஆண்டவன் செயல் என்று இருப்பார். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் வெற்றியைக் கண்டு சோம்பியிராமலும் தன் செயல்களை சீர்பட நடத்தினார்.





அக்பர் (1556 - 1605 / 963 - 1014)

இந்தியாவில் அரசாண்ட சிறப்புமிக்க அரசர்களுள் அக்பரும் ஒருவர். அளப்பரிய அல்லல்களுக்கிடையில் பிறந்து வளர்ந்து, படிக்காத மேதையாகி, வீரனாகவும் விவேகியாகவும் வாழ்ந்து பேரரசு ஒன்றை அமைத்து எம்மதமும் சம்மதம் என்ற சமயப் பொறையுடன் செங்கோலோச்சிய செம்மல் இவர். இந்தியாவில்லுள்ள இரு பெரும் மதங்களான இந்து மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைந்து, காலமெல்லாம் இருந்துவரும் மதப் பூசல்களுக்கு முடிவ்வு காண முயன்ற விந்தை மனிதர் இவர். களத்தில் தோல்வியே கண்டிறாதவர். அவரது சீரிய ஆட்சி முறையின் சுவடுகளை முகலாயருக்குப் பின் வந்த ஆங்கிலேயரின் ஆட்சி முறையில் காணலாம். அக்பரின் ஆட்சியில் மத பேதமின்றிப் பதவிகள் வழங்கப்பட்டன. எல்லா மதத்தினரையும் பின்னிப் பிணைத்து வலிமைமிக்க பேரரசொன்றை நிறுவிய பெருமை அக்பரையே சாரும்.  அக்பர் நிலவரி நிர்வாகத்திலும் சமூகத்திலும் செய்த சீர்திருத்தங்கள் அவருக்கு வரலாற்றில் நிலையான ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தன. இவரது அரவணைப்பில் கலைகள் வளர்ந்தன; கற்றோர் களிப்புற்றனர். முஸ்லிம்கள் இந்தியாவில் காலூன்றிய நாள் முதல் அவர்களது ஆட்சி முடிவடையும் வரை அக்பரைப் போன்ற ஒரு மாமன்னர் தோன்றவில்லை எனலாம்.

அக்பரின் தந்தை முகலாயப் பேரரசர் ஹுமாயூன் ஆவார். ஹுமாயூன் ஆட்சியை இழந்து சிந்துவில் அலைந்து கொண்டிருந்தபோது அப்பிரதேசத்தில் இருந்த அமர்கோட் எனும் சிற்றூரில் கி.பி.1542ல் அக்பர் பிறந்தார். இளமையில் புத்தகப் படிப்பு அக்பருக்கு வேம்பாய்க் கசந்தது. பாரசீக அறிஞர்  அப்துல் ல்தீப் என்பவர் அவருக்கு முழு நேர ஆசிரியராக நியமிக்கப்பட்டபோதும் இவர் படிப்பில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. மாறாக குதிரைச் சவாரியிலும் அம்பெய்தல், வேட்டையாடுதல் முதலானவற்றிலும் அலாதிப் பிரியம் காட்டினார். இயல்பிலேயே இவர் சிறந்த அறிவுக்கூர்மையையும் நினைவாற்றலையும் பெற்றிருந்தார்.

தந்தை ஹுமாயூனின் மரணத்தயடுத்து அப்போது 13 வயது மட்டுமே நிரம்பியிருந்த அக்பர் ஆக்ராவில் வைத்து பாதுஷாவாக 1556ல் முடிசூட்டப்பட்டார். இவர் சிறுவராக இருந்ததால் ஆரம்பத்தில் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் அக்பரின் உதவியாளராக இருந்த பைராம்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. வயது 18 ஆனதும் ஆட்சிப் பொறுப்பைக் கையிலெடுக்க விரும்பியதால் பைராம்கானுக்கும் அக்பருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. தனது ஆப்கானிய உதவியாளர் ஒருவரின் துணை கொண்டு  பைராம்கானைத் தீர்த்துக் கட்டி, ஆதிப் பொறுப்பு முழுவதையும் தனதாக்கிக் கொண்டார்.

தனது அரசாங்கத்தை ஸ்திரப்படுத்த விரும்பிய அக்பர் இராஜ புத்திரர்களோடு மென்மையாக நடந்து கொண்டார். இந்துக்களைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களை அரவணைக்கவும் செய்தார்.

ஆட்சியைப் பலப்படுத்திய அக்பர் பின்னர் தனது சாம்ராஜ்யத்தின் எல்லையை விஸ்தரிக்க விரும்பினார். முதற்கட்டமாக குவாலியர் கோட்டை மீது படை நடாத்திச் சென்று அதனைத் தன்வசப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து மாளவம் (1561), கோண்டுவானா (1564), சிதூர் (1567), குஜ்ராத் (1572), கிழக்கு வங்கம் (1574), மேவார் (1576), காஷ்மீர் (1586) போன்ற பல பிரதேசங்கள் கைக்கப்பற்றப்பட்டு அக்பரின் ஆட்சியின் கிழ் கொண்டுவரப்பட்டன.இதன் பின்னரும் தக்காணம், அஹ்மத் நகர், காந்தேஷ் முதலாம் பகுதிகள் அக்பரால் கைப்பற்றப்பட்டன.

ஆட்சியைப் நிலைப்பலப்படுத்தும் தனது திடடத்தின் அடுத்த கட்டமாக இராஜபுத்திரர்களுக்கும் தனக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். இந்தியாவி முகலாயர்களின் ஆட்சி வேரூன்ற வேண்டுமானால் இந்து வீரர்களான இராஜபுத்திரர்களின் உறவும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை அக்பர் நன்கு உணர்ந்திருந்தார். எனவே அக்பர் இராஜ புத்திரர்களோடு மென்மையாக நடந்து கொண்டார். இந்துக்களைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களை அரவணைக்கவும் செய்தார்.  1562ல் தனதாட்சிக்குப் பணிந்த ஜெய்ப்பூர் அரசர் பீஹர்மாலின் புத்திரியைத் தனது மனைவியாக்கிக் கொண்டார். இவரின் புத்திரர்தான் இள்வரசர் ஸலீம்.பின்னரும் தனக்குப் பணிந்த ஆட்சியாளர்களின் புத்திரிகளை மணந்து கொண்டதோடு மட்டுமன்றித் தனது உறவினர்களையும்  இந்துப் பெண்களை மணக்கச் செய்தார்.  இராஜபுத்திரர்கள் பலரை அக்பர் தனது நிர்வாகத்தில் உயர் பதவிகளிலும் அமர்த்திக் கொண்டார். இத்தகைய திருமணங்களால்  ஆட்சிக்கு நன்மை பயப்பதாகவே அமைந்தன.

மன்னர் அக்பரது இந்த இராஜ புத்திரக் கொள்கை இந்து முஸ்லிம் பண்பாட்டு ஒருமுகப்பாட்டுக்கு வழிகோலியது. கருத்துப் பரிமாற்றமும் கலாசாரப் பரிமாற்றமும் தடையின்றி இடம்பெற்றன. இந்துக்கள் உருது, பாரசீகம் போன்ற மொழிகளைக் கற்றனர். முஸ்லிம்களும் சமஸ்கிருதம்,  இந்தி ஆகிய மொழிகளைக் கற்றனர். இந்நடைமுறை நாளடைவில் இந்து மதக் கொள்கைகளின்பால் அக்பரை ஈர்க்கச் செய்தது.தனது இந்துமத மனைவியருக்கு அவர்களது சம்மயச் சடங்குகளையும் விழாக்களையும் மேற்கொள்ள இடமளித்ததோடு நில்லாது தானும் அம்மதத்தின் ஆசாரங்கள் பலவற்றையும் மேற்கொண்டார். நாள்தோறும் தனது ஜன்னல்லருகே நின்று பொது மக்களுக்கு தரிசனமளித்தார். தீபாவளி, சிவராத்திரி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடினார். நெற்றியில் திலகமிட்டுக்கொண்டார். இந்துக்களைப் போலவே தலையில் குடுமி வைத்து தலைப்பாகை கட்டிக்கொண்ட அக்பர், இந்து மத ஆசாரப்படி காலில் வீழ்ந்து வணங்கும் வழகத்திற்கும் தனது சபையில் அக்பர் அனுமதி வழங்கியிருந்தார்.

அக்பர் புகுத்திய புதிய சமயக் கொள்கையே "தீனே இலாஹீ" இறை ஒருமைப்பாடு என்பதாகும். பல ஆண்டுகளாக  இறைவனைப்பற்றி அழமான ஆய்வுகளை மேற்கொண்ட அவர் இதர சமயங்களின் குறை நிறைகளையும் அலசி ஆராய்ந்தறிந்ததன் விளைவாகப் பிறந்ததே இந்தப் புதிய மார்க்கமாகும். நாடு முழுவதற்குமான ஒரு பொதுச் சமயம் தேவை எனும் கருத்தியலை மையப்படுத்தியதாகவே   அக்பரின் இக்கொள்கை அமைந்தது.

அக்பர் தன்னது பாட்டனைப்போலவே நெஞ்சுரம்மிக்க ஒரு கடமை வீரராகத் திகழ்ந்தார். இளமை முதல் போர்களிலும் வேட்டையாடுவதிலும் ஈடுபாடு காட்டியதால் அவர் மிகச் சிறந்த உடற்பலத்தைப் பெற்றிருந்தார். வீரத்தில் மாவீரன் அலக்ஸாண்டருக்கு ஒப்பிடப்பட்டார். கடினமான ஒரு பணியைக்கூட விருப்போடு ஏற்றுக்கொள்வது அவரது இயல்பாக இருந்தது. ஒரு சமயம் அஜ்மீருக்கும் ஆக்ராவுக்கும் இடையிலான 240 மைல் தூரத்தை சரியாக ஒரு நாளில் சவாரி மூலம் சென்று முடித்தார்.

அக்பர் சிறு வயது முதலே குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சிலபோது அளவு கடந்து குடித்ததால் தன்னிலை கெட்டுத் தடுமாறிய சந்தர்ப்பங்களும் உண்டு.வாலிப வயதில் காம வெறி கொண்டலைந்த அக்பர் அழகிய பெண்களை அடைவதில் அதீத ஆவல் கொண்டிருந்தார்.  பிற்காலத்தில் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ்ந்தார். கோபமுற்ற சந்தர்ப்பங்களில் தீயெனக் கொதித்த அக்பர் கோபம் தணிந்த வேளைகளில் குளிரும் நிலவெனக் காட்சியளித்தார்.

படியா மேதையான அக்பருக்கு கேள்வி ஞானமே அதிகமிருந்தது. அவரிடம் காணப்பட்ட இந்த இயல்பான ஞானம்தான் அவரை மெய்ப்பொருள் காணவும்  வைத்தது.

எல்லா மன்னர்களியும் போலவே இவரும் இந்தியக் கட்டடக் கலை வளர்ச்சியில்  பெரும் பங்களிப்புச் செய்தார். தனது மகன் ஸ்லீமின் பிறப்பையொட்டி ஆக்ராவில் 7 மைல் சுற்றளவு கொண்ட , மூன்று பக்கங்கள் சுவரால் சூழப்பட்ட ஒரு சிற் நகரை நிருமணித்தார். ராணி ஜோத்பாய் மாளிகை, பீர்பால் இல்லம், தீவானி காஸ், செங்கோட்டை, லாகூர் கோட்டை, அலகாபாத் கோட்டை முதலியன அக்பரின் கட்டடக் கலை ஆர்வத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சுமார் 50 வருடகால ஆட்சியின் பின்னர் மன்னர் அக்பர் தனது 63ம் வயதில் காலமானார். இவரது அடக்கவிடம் ஆக்ராவிலுள்ள சிக்கந்தரா எனுமிடத்தில் அமையப் பெற்றுள்ளது.



ஜஹாங்கீர் (1605 - 1627 / 1014 - 1036)

அக்பர் இறக்கும்போது தந்து புத்திரர் ஸலீம்தான் தனக்குப் பின்னர் ஆட்சியாளராக வரவேண்டுமென விரும்பினார். இதன்படி 1605ல் (ஒக்டோபர் 21)நூருத்தீன் முஹம்மத் ஜஹாங்கீர் பாதுஷா காழி எனும் பட்டப்பெயரோடு ஆட்சியில் அமர்ந்தார். ஜஹாங்கீர் என்ற பாரசீகப் பதத்திற்கு உலகைக் கைப்பற்றி ஆள்பவன் என்பது பொருள்.

1569ல் பிறந்த இவர் இளம் பராயத்திலேயே பாரசீகம், துருக்கி, ஹிந்தி முதலாம் மொழிகளை விரும்பிக் கற்றார்.  இளமையிலேயே இலக்கியம், கணிதம், புவியியல், உயிரியல், இசை, ஓவியம், தாவரவியல்  முதலானவற்றை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். ஃபைராம்கானின் மகன் அப்துர்ரஹீம் போன்ற திறமை மிக்க ஆசாங்களிடம் கல்வி பயின்றார். இவரிடம் நற்குணங்கள் குடிகொண்டிருந்தது போலவே தீய குணங்களும் குடிகொண்டிருந்தன. 17 வயதிலேயே ஜஹாங்கீர் குடிப்பழக்கத்துக்கு  அடிமையானார். சிற்றின்ப ஆசையில் மூழ்கித் திளைத்தார். ஓயாத குடியும் ஒழியாத சிற்றின்ப நாட்டமும் தனது தந்தை அக்பரிடமிருந்து பெற்றிருந்த உடற்கட்டை நிலைகுலையச் செய்தன. இவர் தனது இறுதிக் காலத்தில் அதிகாரத்தை இழந்து, அவரது அழகிய மனைவி நூர்ஜஹானை  கைகளில் ஒரு பொம்மை போலவே செயற்பட்டு வந்தார்.

பதவிக்கு வந்த ஜஹாங்கீர் ஆரம்பமாகப் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  அவற்றுள்  பன்னிரு கட்டளைகள் (துஸ்தூருல் அமல்)  என்ற பெயரிலவர் வெளியிட்ட அறிக்கை முக்கியமானதாகும். இதற்கு மேலாக அவர் ஆற்றிய பணிகளைப் பின்வருமாறு நோக்கலாம்.
1. கைதிகளை விடுதலை செய்தார்.
2. அவரது பெயர் பொறிக்காப்பாட்டு நாணயங்கள் வெளியிடப்பட்டன.
3. நீதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்தினார்.
4. ஆக்ரா கோட்டையில்  ஒர் ஆராய்ச்சி மணியைத் தொங்கவிடார். பொற் சங்கிலியொன்று அந்த மணியோடு இணைக்கப்பட்டிருந்தது.  நீதி வேண்டுவோர்  அந்தப் பொற்சங்கிலியை அசைத்து மணியோசை செய்தால் அரசர் நேரில் வந்து அவர்தம் குறைகளைத் தீர்த்து வைத்து முறை வழங்குவார்.

முன்னைய முகலாய மன்னர்களின் காலத்தில் போலவே ஜஹாங்கீரின் காலத்திலும் பல்வேறு படையெடுப்புக்கள் இடம்பெற்றன.  அவற்றுள் கீழ்க் குறிப்பிடப்படும் இடங்களில் இடம் பெற்ற படையெடுப்புக்கள் முக்கியமானவை.
1. வங்காளம் (1612)
2. மேவார் படயெடுப்பு (1614)
3. தக்காணத்தின் மீதான படயெடுப்புக்கள் (1608 - 1617)
4. காங்காரா (1620)


இவ்வளவு வெற்றிகளுக்கு  மத்தியில் ஏற்கெனவே ஹுமாயூன் காலத்தில் கைநழுவி அக்பரால் மீண்டும் கைப்பற்றப்பட்டிருந்த கந்தகார் பிரதேசம் இவரது காலத்தில் மீண்டும் கை நழுவிப் போனது.   இவரது கட்டளையை ஏற்று இவரது மகன் குர்ரம்  கந்தகார்மீது படையெடுப்பு மேற்கொள்ளாததே  இதற்குக் காரணமாகும்.  இவரது மூத்த மகன் குஸ்ரூ இவரை எதிர்த்துக் கலகம் செய்தபோது மகனின் எதிர்ப்பை வெற்றீகரமாக முறியடித்தார்.

உல்லாசப் பிரியரான ஜஹாங்கீர் சுகபோகங்களில் மூழ்கித் திழைத்தார். இதனால் இவரது  காதல் மனைவி நூர்ஜஹானே ஆட்சியை நடாத்தி வந்தார். நூர்ஜஹான் தனது கணவனை பொம்மையாக்கி அதிகாரம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டார். இதன் மூலம் தன் உறவினர்களை உயர் பதவிகளில் அமர்த்தினாள். தன் சகோதரனுக்கு ஆஸப்கான்  எனப்  பட்டம்  சூட்டி அரசவையில் அவருக்கு முக்கிய இடம் கொடுத்தார். நூர்ஜஹானின் தந்தை கியாஸ்பேக்கும்  அரசவையில் முக்கிய செல்வாக்குப் பெற்றார். இக்காலத்துப் பெண்கள் போதியளவு உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று வாழ்ந்தனர். கலைத்துறை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு வழங்கிய இவர் பாரசீகப் பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார். எல்லையற்ற அதிகாரங்களோடு நடந்து கொண்டதால் குர்ரம் புரட்சி செய்தார்.

ஜஹாங்கீர் அளவுக்கு மீறி மதுவருந்தியதால் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டார். ஓய்வுக்காக காஷ்மீர் சென்றார். அங்கு கி.பி.1627ல் காலமானார். மனைவி நூர்ஜஹான் 1645ல் காலமானார்.

ஷாஹ்ஜஹான் (1627  - 1658  /  1037 - 1067)

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாவது புதல்வரான இவர் கி.பி.1592/3ல்  லாகூரில் பிறந்தார். தாயார் பெயர் பல்மதி - ராஜா உதை சிங்கின் மகள். இவரது இயற் பெயர் மிர்ஸா குர்ரம் என்பதாகும். இவர் அக்பரின் முகச்சாயலைப் பெற்றிருந்தார். இளமையில் இவர் மீது ஜஹாங்கீர் அதிக அன்பு செலுத்தியதோடு இவரைத் திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்து வந்தார். பாரசீக மொழியில் ஆர்வம் காட்டிய ஷாஹ்ஜஹான்; அரசியல், சமயம், மருத்துவம்  முதலாம் துறைகளை விரும்பிக் கற்றார்.  1610ல் மீர்சா எனும் பெண்ணையும் 1612ல்  அர்ஜுமந்த் பானு பேகம் எனும் பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மேலதிகமாகத் தனது அந்தப்புரத்தில் இருந்த பல பெண்கள் ஷாஹ்ஜஹானின் நெஞ்சத்தில் உலா வந்தனர்.

இவர் ஆட்சிக்கு வருவதை விரும்பாத இவரது எதிரிகள் இவருக்கெதிராகப் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டனர். இவரின் செல்வாக்கைக் குலைக்க நூர்ஜஹான செய்த சதிகளும் முறியடிக்கப்பட்டன.  எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரிபோல திடமான உள்ளத்தோடு போராடி  சகல் எதிர்ப்புக்களையும் வெற்றி கொண்டவராய் 1628ல், அபுல் முஸாபிர் ஷஹாபுத்தீன் முஹம்மது ஷாஹ்ஜஹான் அனும் பட்டத்தோடு ஆட்சியில் அமர்ந்தார்.

ஷாஹ்ஜஹானின் ஆட்சிக் காலத்தை முகலாய ஆட்சியின் பொற்காலம் என்பர். இக்காலத்தில் ஆட்சி செழிப்புற்று ஓங்கியது. பொன்னும் பொருளும் காண்போரை மலைக்கச் செய்தன. தாஜ்மஹல், முத்து மசூதி, அலிமசூதி முதலியவை அவரது ஆட்சியின் அடையாளங்களாக விளங்குகின்றன. டெல்லி, லாகூர், காஷ்மீர் முதலாம் இடங்களில் அமைக்கப்பட்ட எழில் மிகு பூங்காக்கள் இவருக்கு தோட்டக் கலையிலும் மலர்களிலும் இருந்த ஆர்வத்தை எடுத்துக்காட்டுகின்றன. தைமூரின் வழிவந்த முகலாயரின் வழித்தோன்றலில் ஷாஹ்ஜஹானே ஆட்சித் திறனிலும் கருவூலத்தைக் கட்டிக் காப்பதிலும் நிலவரிச் சீர்திருத்தங்கள் செய்வதிலும் படை வீரர்கள், அதிகரிகளின் திறமைகளைக் கண்டறிவதிலும் சிறந்தவராக விளங்கினார். குடி மக்களுக்கு துன்பம் விளைவித்த கவர்னர்களையும் இதர அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்ததால் ஆட்சியில் அமைதி நிலவியது.

முகலாயர் ஆட்சியில் ஷாஹ்ஜஹான் காலத்து ஆட்சி பரந்து விரிந்த ஒரு பேரரசாகக் காணப்பட்டது. ஒரு தந்தை தனது குடும்பத்தைக் கட்டிக் காப்பது போல அவர் தனது குடிமக்களைக் காத்தார். முகலாயரது கட்டடக் கலை இவரது காலத்திலேயே உச்ச நிலையை அடைந்தது. ஷாஹ்ஜஹான் நிறுவிய எழில் மிகு காதல் சின்னத்தை (மாளிகையை) அவரே, "இவ்வுலகின் விண்ணுலகம்" எனக் குறிப்பிடுகிறார். வெண் சலவைக் கற்களால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வழகு மாளிகை இன்றும் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது.  தனது முன்னோரிடம் இருந்து பெற்றுக்கொண்ட செல்வமும் நாட்டின் வர்த்தக விருத்தியால் கிடைத்த வருமானமும் தனது ஆட்சியின் கீழிருந்த பெரு நிலப்பரப்புக்களிலிருந்து கிடைக்கப்பெற்ற திறைகளும் இவரை மிகப்பெரும் செல்வந்தனாக்கின. இதனால், இது நுண்கலையில் அவருக்கிருந்த ஆர்வத்தைத் தூண்டியது. இதன் விளைவாக எழில் மிகு கட்டடங்கள் அவரது ஆட்சியில் எழுந்தன. இவர் முகலாயரின் அகஸ்டஸ் என்று கூட வர்ணிக்கப்படுகிறார். தனித் தங்கத்தில் வடித்தெடுக்கப்பட்ட முத்துக்களும் நவரத்தினங்களும் பதிக்கப்பட்ட ஒளி மிக்க மயிலாசனத்தில் ஆட்சி செய்த ஷாஹ்ஜஹானின் ஆட்சி இன்னும் ஒளி பெற்று விளங்கியது. இவரது அரசவையை போர்வ்வீரர்களும் கவிஞர்களும் கலைஞர்களுமே அணி செய்தனர்.

ஷாஹ்ஜஹான்  ஆட்சியில் இந்துக்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். அவரது மகன் தாரா இந்துக்களோடு  நெருங்கிப் பழகினார். இருப்பினும் இவரது ஆட்சியை சமயப் பொறையுடன் கூடிய ஆட்சிதான் என்று கூறுவதற்கில்லை. ஷாஹ்ஜஹான் அடிப்படையில் ஒரு ராஜபுத்திரியின் மகனாக இருந்தபோதும் இவரது காதலி மும்தாஜின் மார்க்க ஈடுபாடு இவரையும் பற்றிக்கொண்டது. இதனால் அக்கால முஸ்லிம்கள் இவரை சமயத்தின்  காவலர் என அழைத்தனர். ஷாஹ்ஜஹான் தன் தந்தையை விட வைதீகமானவர். அவரிடம் சமய வெறி காணப்படாவிட்டாலும் சிலபோது அவரது நடத்தைகள் அவரிடம் சமயவெறி இருந்தது என்பதைக் காட்டின. அவர் தனதாட்சியில் முஸ்லிமல்லாதோரை துன்புறுத்தாவிட்டாலும் அக்பரின் சமயப் பொறை படிப்படியாக இவரது காலத்தில் கைவிடப்பட்டது எனலாம்.

இவ்வளவு சிறப்புக்களையும் பெற்றிருந்த ஷாஹ்ஜஹான் தான் இறப்பதற்கு முன்பு தனது மகன் ஔரங்கசீப்பாலும் சிறைக்காவலன் முதாமத் என்ற கொடியவனாலும் பல அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்டு குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத நிலையில் உயிர் நீத்தார். ஒரு தாய் வயிற்றில் பிறந்த தனது பிள்ளைகள் நால்வரும் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு யுத்தங்கள் செய்து கொண்டதை கண்கூடாகக் கண்டு துயருற்ற ஒரு துர்ப்பாக்கியசாலித் தந்தை வரலாற்றில் இவரொருவராக மட்டுமே இருந்திருக்க முடியும்.

1 comment: